Tuesday, December 28, 2010

அ.தி.மு.க., ஆட்சியின் மீது வழக்குகள் போடாதது ஏன்?

"கடந்த 1991-96ம் ஆண்டுகளில் நடந்த ஊழல்களுக்காக போடப்பட்ட வழக்குகளே இன்னும் நீடிக்கிறது. 2001-06ம் ஆண்டுகளில் நடந்தவைகளுக்காக வழக்கு என்றால் அது எப்போது முடியுமோ' என முதல்வர் கருணாநிதி ஆதங்கப்பட்டுள்ளார்.

இது பற்றி, அவர் நேற்று வெளியிட்ட கடிதம்: ஜெயலலிதாவின் 26ம் தேதி அறிக்கையில், 2001-06 ஆட்சியில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மையான ஆட்சியை நடத்தியதால், தன் மீது பொய் வழக்கு போட கருணாநிதிக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்ற வாசகங்களைப் படித்த போது சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜெயலலிதாவை முதல்வராக நியமித்தது சட்டப்படி செல்லாது என தாக்கல் செய்த வழக்கில், 2001 செப்., 21 அன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி பரூச்சா தலைமையிலான ஐந்து நீதிபதிகள், "தமிழக முதல்வராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டது செல்லாது. அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இனியும் அவர் முதல்வராக நீடிக்க முடியாது' என தீர்ப்பளித்தனர். அதன் பின்னரே இடைக்கால முதல்வர் பதவி பன்னீருக்கு கிடைத்தது. இதுவும் ஒரு தூய்மையான ஆட்சிக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ் தானே?

அவரது ஆட்சியில் நான் உட்பட எங்கள் கட்சியினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டோம். அவரது வளர்ப்பு மகன் என கூறப்பட்ட சுதாகரன் கைது செய்யப்பட்டார். தமிழக தணிக்கை துறை அதிகாரி தீத்தன், 2004ல் அரசின் தவறான அணுகுமுறையால், 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என அறிக்கை கொடுத்தார். அதற்காக, அவரை பதவி நீக்கம் செய்ய வழக்கு தொடுத்ததோடு, அவருக்கு எதிராக முழு பக்க விளம்பரங்கள் தரப்பட்டன. அந்த ஜெயலலிதா தான் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தணிக்கைத்துறை அதிகாரி கொடுத்த அறிக்கையை, தலையிலே தூக்கி வைத்து ஆடுகிறார்.

முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் சென்னையில், 2001 டிச., 30 அன்று கடத்தி செல்லப்பட்டார். பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. 2003ல் ஜெயலலிதா அரசு மின் கட்டணங்களை உயர்த்தியது. இலவச மின்சாரத்தை ரத்து செய்தது. கடந்த 2002 மே மாதம் 7ம் தேதி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து, சட்டசபையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. 2003 ஜன., 30ம் தேதி அது, அ.தி.மு.க., அரசாலே திரும்ப பெறப்பட்டது. இடையில் என்ன நடந்தது? தூய்மையான ஆட்சிக்கு தான் வெளிச்சம்.

அரசு ஊழியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை போப் ஆண்டவர் கண்டித்தார். இதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். இதை கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர்கள் சிலர் மறந்து விட்டது ஆச்சரியத்திலும், ஆச்சரியம். ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும், மணல் கொள்ளை, விலை உயர்வு என எழுத தவறுவதில்லை. அவருடைய தூய்மையான ஆட்சியிலே மணல் கொள்ளை பற்றி அப்போது ஒரு வார ஏடு செய்தி வெளியிட்டது. இப்பட்டியலை இத்துடன் நிறுத்துகிறேன். 1991-96ம் ஆண்டுகளில், அவர் ஆட்சியிலே இருந்த போது நடத்திய ஊழல்களுக்காக, போடப்பட்ட வழக்குகளே, சிறப்பு கோர்ட்டுகளில் இன்னும் நீடித்து கொண்டிருக்கையில், 2001-06ம் ஆண்டு நடைபெற்றவைகளுக்காக வழக்கு என்றால், அது எப்போது முடியுமோ? இவ்வாறு முதல்வர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Monday, December 27, 2010

"'பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்!'"


அடல்ஸ் ஒன்லி படங்களை 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பார்க்க முடியாது, பார்க்கக் கூடாது. அது போலதான் இந்தச் செய்தியும்! பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்டில் அதிகமாக முதலீடு செய்திருப்பவர்கள், வயதானவர்கள், இதயத்தில் பிரச்னை இருப்பவர்கள்  இந்தக் கட்டுரையை படிக்காமல் இருப்பது நலம். அல்லது குறைந்தபட்சம் கொஞ்சம் முன் தயாரிப்புகளோடு படிக்கவும்!
2012-ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என்று சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி தீயாகப் பரவியது. அதைப் பற்றி ஒரு படம்கூட எடுத்தார்கள். ஆனால் அந்தச் செய்தி உண்மையா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல இன்னொரு குண்டை அமெரிக்கா மீது தூக்கிப் போட்டிருக்கிறார் ஜெரால்டு செலன்ட்(Gerald Celente) என்ற அமெரிக்கப் பொருளாதார வல்லுநர். அவர் என்ன சொன்னார் என்பதற்கு முன்பாக அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்...
அமெரிக்காவில் பிறந்த ஜெரால்ட், 'தி டிரெண்ட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் இயக்குநராகவும் இருக்கிறார். அவ்வப்போது நம்மூர் சாமியார்கள் மாதிரி ஆருடங்களை அள்ளிவிடுவார்... கிட்டத்தட்ட யாகவா முனிவர் மாதிரிதான்! 'இனி தங்கம்தான் தங்கும்; தானியம் தங்காது’ என்று யாகவா எடுத்துவிடுவதைப் போல எடுத்துவிடுவார்... ஜெரால்டு சொல்வது ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகமாகத்தான் இருக்கும். அவர் ஏதாவது சொல்லாமல் இருந்தால் அதுவே நல்லது என்று பிரார்த்திப்பவர்கள் நிறைய பேர்! அந்த அளவுக்கு மனுஷனுக்கு கருநாக்கு! அந்த நாக்கு சுழன்று சொற்களை வீசினால் திராவகம் தெளித்த கதிதான்!

கருநாக்கு ஜெரால்ட் ஆரூடம் சொன்ன சில விஷயங்களை முதலில் பார்க்கலாம்... 1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சுக்குநூறாகும் என்றார். அதைப்போலவே உடைந்ததும் சுக்கு நூறல்ல, ஆயிரம் ஆனதும் அனைவரும் அறிந்ததே! அடுத்து 1987-ம் வருடம் பங்குச்சந்தை சரியும் என்று சாபமிட்டார், அதுவும் அப்படியே ஆனது! ஆசியாவில் நடந்த கரன்சி யுத்தம், சப் பிரைம் மார்ட்கேஜ் பிரச்னை என அனைத்தையும் முன்கூட்டியே சொன்ன முனிவர் (வெள்ளைக்கார!) அவர். இவ்வளவு பில்ட் அஃப் கொடுக்கிறீர்களே, அப்படி என்னதான் சொன்னார் என்று கேட்கிறீர்களா? இதுதான் விஷயம். ''2012-ம் ஆண்டு டிசம்பருக்குள் அமெரிக்கா இன்னொரு பொருளாதார நெருக்கடியில் மாட்டும். அது 1929-ம் ஆண்டு கிரேட் டிப்ரஷனை விட பயங்கரமானதாக இருக்கும். இப்போது வளர்ந்த நாடாக இருக்கும் அமெரிக்கா 2012-ல் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடும்! அப்போது நடக்கும் சண்டை பெரும்பாலும் உணவுக்காகத்தான் இருக்கும். வேலை இருக்காது, யாரும் வரிகட்டமாட்டார்கள். நிறைய பேர்களுக்கு வேலையில்லாமல் போகப்போவதால் கலவரம் வெடிக்கும். 2012-ம் ஆண்டு கிறிஸ்மஸுக்கு யாரும் கிஃப்ட் வாங்கப்போவதில்லை! அப்போது சரியான உணவு கிடைத்தால் அதுவே கிஃப்ட்தான்! டாலர் தன்னுடைய மதிப்பை 90 சதவிகிதம் வரை இழக்கும்'' என்று திகிலூட்டி இருக்கிறார் ஜெரால்டு.
மேலும் அவர், ''கடந்த 30 வருடங்களில் பணக்காரர்களுக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து கொண்டே வந்திருக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இந்த மிடில் கிளாஸ் மக்கள்தான் நாட்டில் நடக்கும் புரட்சிக்கு வினைஊக்கியாக இருப்பார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் வால் ஸ்டீரிட்டில் என்ன நடக்கும் என்பது பற்றிச் சொல்லத் தேவையே இல்லை.
இதனால் ரியல் எஸ்டேட் பாதாளத்தில் விழும். ஏற்கெனவே நிறைய பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது நாடு முழுவதும் டென்ட் நகரங்கள்தான் முளைக்கும். குற்றச்செயல்கள் தறிகெட்டு அதிகரிக்கும்'' என்று சொல்லிக்கொண்டே போகிறார் ஜெரால்டு.
இதற்கு தூபம் போடுவது போல அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்டீரிட் ஜர்னல், சி.ன்.பி.சி., யு.எஸ்.ஏ. டுடே போன்றவை ஜெரால்டுக்கு சாதகமாகவே எழுதி இருக்கின்றன. இதற்கு ஒரு படி மேலே போய், 'நாஸ்டர்டாம்ஸ் இருந்தால் அவர் ஜெரால்டுடன் போட்டி போடுவது கஷ்டம்தான்’ என்று எழுதி இருக்கிறது நியூயார்க் போஸ்ட்.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெரி கட்டும் காலம் இது. அமெரிக்க மார்க்கெட் டல்லடித்தால் உடனே நம்மூர் மார்க்கெட் படுத்தே விடும். இந்நிலையில் ஜெரால்டு சொன்ன விஷயங்கள் எல்லாம் நடந்தால், நம் சந்தை என்ன ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. கடவுளிடமோ அல்லது இயற்கையிடமோ பிரார்த்திக்கும் போது இனி அமெரிக்காவும் நல்லா இருக்கணும் என்று வேண்டிக்கொள்ளலாம். நம்மால் முடிந்தது அதுதான்!