Monday, February 21, 2011

'கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!' : தமிழனுக்கு ஒரு வேண்டுகோள்



ஃபிரான்ஸ் நாட்டு அரச நாற்காலியில் அமர்ந்த மாவீரன் நெப்போலியன் தன் மனைவி ஜோசபைனுக்கு வரைந்த காதல் கடிதத்தில், 'அன்பே, உன்னைக் காதலித்து உள்ளம் உருகாமல் ஒரு நாளைக்கூட நான் கழித்தது இல்லை. உன்னை நினைவுகளால் தழுவி மகிழாமல் ஓர் இரவைக்கூட நான் வீணாக்கியது இல்லை’ என்று குறிப்பிட்டான். நம் அரசியல்வாதிகளும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒரு நாளையும் கழித்தது இல்லை; பணப் பெட்டியின் ஸ்பரிசம் இல்லாமல் ஓர் இரவையும் வீணாக்குவது இல்லை.
எந்த மனிதனும் காதலிக்காமல் கண் மூடுவது இல்லை. பெண்ணைக் காதலிக்காதவன் கடவுளைக் காதலிக்கிறான். இருவரையுமே காதலிக்காதவன் ஒரு கட்சியின் தலைமையைக் காதலிக்கிறான். கட்சித் தலைமை அவனுடைய காதலில் நெகிழ்ந்து, பரிசாகக் கொடுத்த பதவியின் மேல், பின்னர் அவனுடைய காதல் கனிகிறது. கால நடையில் பதவியின் மூலம் வந்து சேரும் பணத்தின் மீது அவன்கொண்ட காதல், பல்கிப் பெருகி அவனைப் பைத்தியமாக்கிவிடுகிறது. லைலாவின் மீதுகொண்ட காதலால் பைத்தியம் பிடித்துப் பாலை நிலத்தில் அலைந்து திரிந்த சயசுக்கு, மான அவமானம் குறித்த பிரக்ஞைஅற்றுப் போனதுபோல், பணத்தின் மீது படிந்துவிட்ட வெறித்தனமான காதலால், நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் மான அவமானம் குறித்த பிரக்ஞை முற்றாக மரத்துப்போய்விட்டது. ஊழல்தான் அரசியல்வாதிகளின் அன்பிற்குரிய காதலி. ஊழலில் தவழ்ந்து, ஊழலில் திளைத்து, ஊழலில் வாழ்ந்து, ஊழலிலேயே ஐக்கியமாவதுதான் இன்றைய அரசியல்வாதியின் இலக்கணம்!
'ஊழல்தான் நம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் பெரு நோய்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வாய் மலர்ந்து இருக்கிறார். அந்த நோயைத் தீர்க்க எந்த மருந்தும் அவரிடம் இல்லை என்பதுதான் நாடு செய்த பாவம். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும். ஊழலை ஊழலால் ஒழிக்க வேண்டும். ஆட்சியாளர்களின் ஊழல் குறித்துச் சிந்திப்பதற்கே நேரம் இல்லாத ஞானச் சித்தர்களாகிவிட்டனர் நம் மக்கள். எய்ட்ஸ் நோயைவிட மிகவும் கொடியது ஊழல் நோய் என்று இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?
'ஊழல்... ஜனநாயகத்தின் உயிரைப் பறிக்கும்; நேர்மையான ஆட்சி முறையை நிர்மூலமாக்கும்’ என்ற உண்மையை எப்போது நாம் உணரப் போகிறோம்? அடித்த கொள்ளையில் எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் போதும் என்று நினைக்கும் நிலைக்கு நாம் இழிந்துவிட்டோமே!
ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகள் வறுமையில் வாடுவதற்கு முதற் காரணம், அங்கு உள்ள ஆட்சியாளர்களே. நைஜீரியாவில் மட்டும் மக்களின் வளம் சுரண்டப்பட்டு, 400 பில்லியன் டாலர் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே அதிகமான கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்திருக்கும் 'பெருமை’ நம் நாட்டுக்குத்தான் வாய்த்திருக்கிறது. 'வறுமையே வெளியேறு’ என்று வாய் கிழிய முழங்குபவர்களும், 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண’ முயல்பவர்களும் சொந்த மண்ணில் சுரண்டிய பணத்தை அந்நிய மண்ணில் அடுக்கிவைத்துள்ளனர். உலகக் கறுப்புப் பணத்தில் இந்தியர்களின் பணம் 60 சதவிகிதமாம். 'பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே. போற்றுவோம் இதை எமக்கில்லை ஈடே’!
வெள்ளையர் நம் மண்ணை ஆண்டபோதே நம் அரசியல்வாதிகளில் சிலருக்கு ஊழல் தேவதையின் மீது காதல் கனிந்துவிட்டது. காங்கிரஸ் 1937-ல் தேர்தல் களத்தில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த மாகாணங்களில் ஊழல் உருப்பெற்றபோது மகாத்மா காந்தி, 'ஊழலின் முடை நாற்றம் பெருகுமானால், காங்கிரஸ் கட்சிக்கு நானே கல்லறை கட்டிவிடுவேன்’ என்றார். நாடு விடுதலை அடைந்த பின்பும், 1948 ஜனவரி 12-ம் நாள் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆந்திராவில் இருந்து பழம் பெரும் தியாகி வெங்கடப்பய்யா தனக்கு எழுதிய கடிதத்தைப் பகிரங்கமாகப் படித்தார் அண்ணல் காந்தி.
'மிகவும் சிக்கலான அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளுக்கு அடுத்து மிகப் பெரிய பிரச்னை காங்கிரஸ்காரர்கள் தார்மீகரீதியாகத் தாழ்ந்துபோய் இருப்பது தான். அரசியல் அதிகாரத்தின் ருசி அவர் களின் தலைக்கேறிவிட்டது. எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி-க்கள் நடவடிக்கைகளும், மந்திரிகளின் பலவீனங்களும் மக்களிடையே கலக உணர்வை ஊட்டி வருகின்றன. வெள்ளைக்காரர்களின் அரசாங்கமே பரவாயில்லை என்று அவர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்’ என்று வெங்கடப்பய்யா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். நேரு காலத்தில் உறக்கத்தில் இருந்து கண் விழித்த ஊழல், மன்மோகன் சிங் காலத்தில் ஊழித் தாண்டவம் புரிகிறது!
நேர்மைக்குப் பெயர் பெற்ற அதிகாரி கோர்வாலா என்பவரிடம் நிர்வாகத் திறன் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும்படி நேருவின் அரசு வேண்டியது. கோர்வாலா சமர்ப்பித்த அறிக்கையில், 'நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் சிலர் ஊழல் பேர்வழிகள் என்றும், ஊழல் அமைச்சர்களைப் பாதுகாக்க நேருவின் அரசு நியாயத்தின் வழி மீறிச் செல்வதாகவும் நெஞ்சுரத்துடன் குறிப்பிட்டார். ஊழலின் நிழல்படாத நேரு அன்று நட்புக்காகப் பழி சுமந்தார். ஊழலில் ஈடுபடாத மன்மோகன் சிங், சோனியா காந்தி தந்த பதவிக்காக இன்று தெரிந்தே பழி சுமக்கிறார்.
ஊழலும் உறவுகளுக்குக் காட்டிய சலுகைகளும்தான் ரோமப் பேரரசை வீழ்த்தியது; பிரெஞ்சுப் புரட்சிக்கு வழி வகுத்தது; ருஷ்யப் புரட்சிக்கு வித்தூன்றியது; சீனாவில் சியாங்காய் ஷேக்கின் ஆட்சிக்கு முடிவு கட்டியது என்ற வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ளக்கூட நம் அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லை.
'சிற்றின்பலோலர்களும், ஆடம்பரப் பிரியர்களும் நம் அரசியல் உலகை ஆக்கிரமித்துக்கொண்டனர்’ என்று சுந்தர ராமசாமி எழுதியது எவ்வளவு பெரிய உண்மை!
'மண்ணின்பம், பெண்ணின்பம், பொன்னின்பம் மூன்றும் எல்லையற்று அனுபவிக்க வேண்டும். அதற்கு அளவற்ற பணம் அவசியம். அதை எந்த வழியில் திரட்டினாலும் தவறு இல்லை. ஆளப்படுவோரின் உள்ளங்களில் முறை தவறிய ஆசைகளை வளர்த்துவிட்டால், ஆள்பவரின் ஊழல் அசிங்கங்களுக்கு எதிராக எந்தக் கிளர்ச்சியும் வளர்ச்சி பெறாது. ஊழல் நாயகர்கள்கூட 'தகத்தகாய கதிரவன்’களாக சமூக வீதிகளில் கொஞ்சமும் கூச்சமற்றுப் பேருலா வரலாம்’ என்று புறப்பட்டுவிட்ட யுக புருஷர்களின் முற்றுகையில், அரசியல் உலகம் சிறைபட்டுவிட்டது. அதிகார வர்க்கம் திருட்டுத் தேனைச் சுவைத்தபடி பல்லக்குத் தூக்கப் பழகிவிட்டது. பெரும் தொழிலதிபர்கள் நீரா ராடியா போன்ற சாதுர்ய சாகசப் பெண்மணிகள் மூலம் அரசின் முடிவுகளைத் தங்க ளுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் கலையைக் கற்றுத் தேர்ந்துவிட்டனர். பாவம், பாரதப் புத்திரர்கள் மட்டும் கந்தல் ஆடையும், கிழிந்த பாயும், கஞ்சிக் கலயமும் மட்டும் சொத்தாகக் கொண்டு 'சுகித்துக்’கிடக்கின்றனர்.
'நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, காரண காரியங்களோடு சமாதானம் கூற முடியாத காரியங்களை நாம் செய்யாமல் இருக்க வேண்டும்’ என்றார் காந்தி. அந்த ஆயிரம் ஆண்கள், பெண்களின் கண்களில் கறுப்புத் துணி கட்டும் துணிவை இந்த அக்கிரமக்காரர்களுக்கு யார் கொடுத்தது? உங்கள் கண்களை 'கறுப்புத் துணி’ மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

Thursday, February 17, 2011

இன்றைய தேவை - தனித் தமிழ்நாடு.

காரணங்கள்.                                                                                        



  1. இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டோம். ஆனால் கர்நாடக அரசு உச்ச நீதி மன்ற உத்தரவை மதித்து இன்றுவரை தண்ணீர் தரவில்லை.
2. தமிழகத்திடம் இருந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் கேரளா,  உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் முல்லை பெரியாரு அணையின் கொள்ளலவை உயர்த்த சம்மதிக்க வில்லை.
3. ஆந்திரா நாங்கள் தண்ணீரை கடலில் கலக்க வேண்டுமானாலும் அனுமதிப்போம், தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என்கிறது. இவர்கள் பாலாற்றின் குறுக்கே அணைகட்டி பாலாற்றை பாலைவனக்க பாடுபடுகிறார்கள்.
4. அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் காலில் எலக்ட்ரானிக் பட்டை கட்டியதற்கு காட்டுக்கத்தல் கத்திய இந்திய அரசு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவன் சுடப்பட்டு இறந்தபோது கூட கடிதத்தோடு நிறுத்திக்கொண்டது.  

சொல்லிக்கொண்டே போகலாம். மற்றவை நாளை.....




மணிப்பூர் மரணித்துவிடும்! - ஓலமிடும் ஓஜஸ்!

 
'அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வோம்?’ என்பதைவிட, 'அடுத்த நொடி
உயிருடன் இருப்போமா? மகள் கற்பு காக்கப்படுமா? மனைவி வீட்டில்தான் இருப்பாளா?’ என்ற தவிப்புகளை மணிப்பூரில் ஒவ்வொரு தகப்பனின் முகத்திலும், கணவனின் முகத்திலும் காணலாம்! பள்ளிக்கூடங்கள் இல்லை, பேருந்து நிலையங்கள் இல்லை, ரயில் நிலையங்கள் இல்லை என்று ஏகப்பட்டவை இல்லை என்றாலும் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கிறது ராணுவம்.  'இவர்கள் நம்மைப் பாதுகாப்​பதற்கு அல்ல... படுகொலை செய்யவே நிற்கிறார்கள்!’ என்றுதான் ஒவ்வொரு மணிப்பூர்வாசியும் நினைக்கிறார்கள். இவர்களுக்காகப் போராட்டக் களத்தில் குதித்த ஐரோம் ஷர்மிளா, 11-வது ஆண்டாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிய மனோரமா, கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்!
கண்ணீரில் மிதக்கும் மணிப்பூரின் சோகத்தை 45 நிமிட நாடகமாக்கி, நாடு முழுவதும் நடத்திவருகிறார் ஓஜஸ் புனே. கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச்சேர்ந்த இவர், தனியரு மனுஷியாக நாடகம் போட்டு அரங்கத்தைக் கட்டிப் போடு​கிறார். நாடகம் முடித்த கையோடு கண்களில் கசியும் கண்ணீர்த் துளி​களை அடக்கியபடி கேள்விகளுக்கு பதிலளித்தார்.
''தனி ஒரு பெண்ணாக நாடு முழுவதும் பயணம் செய்து நாடகம் போடும் எண்ணம் தோன்றியது எப்படி?''
''என்னுடைய பெற்றோரும் இது போன்ற பல கொடுமையான சூழல்களையெல்லாம் தாண்டி வந்தவர்கள்​தான். அங்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் பயந்து வாழ்வதை நான் விரும்பவில்லை. 'இந்தியா’ என்றால் தாய்த் திருநாடு, நானும் இந்தியன் என்று கிரிக்கெட்டிலும், சுதந்திர தினத்தன்றும் மட்டுமே உணர்ச்சி பொங்கக் கூவுவது உங்களைப் பொறுத்தவரை நன்றாக இருக்கலாம். ஆனால், உண்மையில் மணிப்பூரில் நடக்கும் கொடுமைகளை, ராணுவத்தால் மக்கள் படும் வேதனைகளை சொல்லால் எழுதிப் புரிந்து கொள்ளவே முடியாது. நாடகத்தின் மூலம் ஓரளவாவது விளக்க முடியும் என்றுதான் மேடை நாடகங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். கடந்த மே மாதத்தில் இந்தப் பயணத்தை ஆரம்பித்தேன். என் மக்களுக்கு என்று நல்வாழ்வு கிடைக்கிறதோ... அன்று வரை நான் இப்படியே பயணத்தில் இருப்பேன்!''
''மணிப்பூரில் என்னதான் நடக்கிறது?''
''மணிப்பூர் பல்வேறு ஆயுதப்படைகளின் கட்டுப்​பாட்டில் இருக்கிறது. 'நிலப்பரப்பைப் பாதுகாக்கிறோம்’ என்று உள்ளே நுழைந்த ராணுவம் அங்குள்ள பெண்களைத் தங்களது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தி வருவது பல ஆண்டுகளாக நடக்கிறது. இதை எதிர்க்கும் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். மணிப்பூரில் நடப்பது முழுக்க முழுக்க ராணுவத்தின் ஆட்சிதான். பொது மக்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தக் கூடாது என்று சட்டமே இருக்கிறது. ஆனால், சட்டத்தை யார் மதிக்கிறார்கள்? எங்கள் பிரச்னையை நீங்கள் உணர மறுத்தால், எதிர்காலத்தில் உலக வரைபடத்தில் மணிப்பூர் மாநிலமே அழிந்து போய்விடும். இதுதான் யதார்த்தமான நிலைமை!
2004-ம் ஆண்டு மனோரமா கொலை செய்யப்பட்டார். அவர் தப்பிச் சென்றதால்​தான் சுட்டுக் கொன்றோம் என ராணுவம் கூறியது. தப்பித்து செல்கிறார் என்றால் பின்பக்கம் அல்லவா குண்டு பாய்ந்திருக்க வேண்டும்? ஆனால், துப்பாக்கி குண்டுகள் அவர் மார்பை அல்லவா துளைத்திருக்கிறது? மனோரமாவை பலாத்காரம் செய்து அதன் பிறகு சுட்டுக் கொன்றார்கள் என்பதுதான் உண்மை!
இந்த நிகழ்வால் கொதித்துப்போய் நிர்வாணப் போராட்டத்தை மணிப்பூர் பெண்கள் நடத்தினார்கள். ஒரு பெண்ணின் உச்சபட்ச தியாகமான உடலைக் கூட வீதியில் காட்டி நாங்கள் போராடினோம். அப்போதும் பெண்களை நோக்கி துப்பாக்கியை நீட்டினார்கள். வன்முறையைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுமக்கள் மீது சுட்டார்கள். இன்று மணிப்பூரில் நாளன்றுக்கு 2 பெண்கள் ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டு வருகிறார்கள். நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் யாராவது ஒரு பெண் தன்னுடைய கற்பை இழந்து கொண்டிருக்கலாம். ஆயுதப் படைகளின் அத்துமீறல்களில் இருந்து மணிப்பூரை விடுவிப்பதுதான் எங்களது ஒரு வரி முழக்கம்.''
''உங்களுடைய பிரசாரத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?''
''மனோரமா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மணிப்பூர் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதை அடுத்த நாள், ஒரு ஆங்கில நாளிதழ் தனது ஐந்தாவது பக்கத்தில் சின்ன பாக்ஸ் செய்தியாகத்தான் வெளியிட்டது. ஆனால், எங்கள் பிரசாரம் அனைவர் மனதையும் மாற்றி வருகிறது. பெங்களூருவில் ஒரு கல்லூரி மாணவர்கள் என்னுடைய நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, 'நார்த் ஈஸ்ட் ஸ்பீச் அவுட் டாட் காம்’ என்ற இணையதளத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். இதன் மூலம் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்ய முன்வந்திருக்கிறார்கள். காலப் போக்கில் இந்த ஆதரவு பெரும் புயலாக எழுந்து வரும். நீங்களும் என்னோடு கைகோப்பீர்களா?'' கேள்வி கேட்கிறார் ஓஜஸ் புனே!